தமிழ்நாடு அரசு 40 அழகிய மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய “தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தை” (Trek Tamil Nadu) தொடங்கி, இதற்கான இலக்கை வெளியிட்டு, இணையவழி முன்பதிவிற்காக www.trektamilnadu.comஎன்ற பிரத்யோக வலைதளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் வனம் மற்றும் வனவிலங்கு பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம், தமிழ்நாடு வன அனுபவக் கழகம் (TNWEC) மற்றும் தமிழ்நாடு வனத்துறை (TNFD) ஆகியவற்றின் கூட்டு முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதும், வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பிற்கான முயற்சியில் வலுசேர்ப்பதும் முக்கிய நோக்கமாகும். இந்த மாமன்னன் முயற்சியில், சுற்றுச்சூழல் சுற்றுலாவை வலுப்படுத்தும் விதமாக, வனப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் மக்களை இத்திட்டத்தில் அதிக அளவில் ஈடுபடுத்தி, குறைந்த கார்பன் அடிச்சுவடு கொண்ட, நிலைத்தன்மை கொண்ட சுற்றுலாவை ஊக்குவிக்கின்றது.
இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு, இயற்கை ஆர்வலர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் வகையில், 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளை பொது மக்களுக்காக திறந்து வைத்துள்ளது. மாநிலத்தின் பசுமைச் சூழலை பாதுகாத்து, சுற்றுலாவில் முன்னோடியாக திகழ தமிழ்நாடு அரசின் உறுதித்தன்மையை இது காட்டுகிறது. மேலும், தமிழ்நாட்டில் ஐந்து புலிகள் காப்பகங்கள், ஐந்து தேசிய பூங்காக்கள், பதினெட்டு வனவிலங்கு சரணாலயங்கள், பதினேழு பறவை சரணாலயங்கள் மற்றும் மூன்று பாதுகாப்பு காப்பகங்களை உள்ளடக்கியுள்ளது.
மலையேற்றம் மேற்கொள்ளவுள்ள ஆர்வலர்களுக்கு வழிகாட்டிகளாக, காடுகள் குறித்த பாரம்பரிய அறிவைக் கொண்ட, 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மற்றும் வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, மலையேற்ற வழிகாட்டிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வன ஒழுக்கம், திறன் மேம்பாடு, முதலுதவி, விருந்தோம்பல் மற்றும் சுகாதாரம், பல்லுயிர் பாதுகாப்பு போன்றவற்றில் போதுமான தொழில்முறை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மலையேற்றத்திற்கு வரும் ஆர்வலர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, அவசர நிலைகளைக் கையாளுவதற்கான பாதுகாப்பு நெறிமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
வழிகாட்டிகளுக்கு சீருடைகள், மலையேற்றக் காலணிகள், முதுகுப்பை, தொப்பி, அடிப்படை முதலுதவிப் பெட்டி, தண்ணீர் குடுவை, வெந்நீர் குடுவை, மலையேற்றக் கோல், தகவல் தொடர்பு சாதனங்கள், விசில் மற்றும் திசைக்காட்டி ஆகியவை அடங்கிய மலையேற்ற உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மலையேற்றம் மேற்கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்குமான காப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சி, பழங்குடியின மற்றும் வனங்களை ஒட்டியுள்ள மக்களுக்கு நிலையான வருமானம் ஈட்டவும், பொருளாதார நிலையை உயர்த்தவும் உதவுகிறது.
பொது மக்களுக்கு முன்பதிவு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட www.trektamilnadu.com என்ற வலைதளத்தில், மலையேற்ற பாதைகள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிக்காட்சிகள், 3D அனிமேஷன் போன்ற அத்தியாவசிய விவரங்களும் விதிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வலைதளத்தின் மூலம் முன்பதிவு செய்பவர்கள் 100% இணையவழி பணப்பரிவர்த்தனை மூலம் தங்களது நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம்.
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றம் மேற்கொள்ள முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். 18 வயதிற்கு குறைவானவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலுடன் மலையேற்றம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் மட்டும் எளிதான மலையேற்ற பாதைகளுக்கு அனுமதிக்கப்படுவர்.
40 மலையேற்றப் பாதைகள்:
- நீலகிரி மாவட்டம்: கய்ர்ன் ஹில் (எளிது), லாங்வுட் ஷோலா (எளிது), கரிகையூர் முதல் போரிவரை ராக் பெயிண்டிங் (மிதமானது), கரிகையூர் முதல் ரங்கசாமி சிகரம் (கடினம்), பார்சன்ஸ் வேலி முதல் முக்குர்த்தி குடில் (கடினம்), அவலாஞ்சி கோலாரிபெட்டா (கடினம்), அவலாஞ்சி (காலிஃபிளவர் ஷோலா) தேவார்பெட்டா (கடினம்), அவலாஞ்சி (காலிஃபிளவர் ஷோலா)-கோலாரிபெட்டா (மிதமானது), ஜீன் பூல் (எளிது), நீடில் ராக் (கடினம்).
- கோயம்புத்தூர் மாவட்டம்: மாணம்போலி (எளிது), டாப் ஸ்லிப் பண்டாரவரை (கடினம்), ஆலியார் கனால் பேங்க் (மிதமானது), சாடிவயல் – சிறுவாணி (மிதமானது), செம்புக்கரை – பெருமாள்முடி (கடினம்), வெள்ளியங்கிரி மலை (கடினம்), பரலியார் (எளிது).
- திருப்பூர் மாவட்டம்: சின்னார் சோதனைச்சாவடி கோட்டாறு (எளிது), காலிகேசம் பாலமோர் (மிதமானது).
- கன்னியாகுமரி மாவட்டம்: இஞ்ஜிக்கடவு (மிதமானது).
- திருநெல்வேலி மாவட்டம்: காரையார் மூலக்கசம் (மிதமானது), கல்லாறு கொரக்கநாதர் கோவில் (கடினம்).
- தென்காசி மாவட்டம்: குற்றாலம் செண்பகதேவி நீர்வீழ்ச்சி (எளிது), தீர்த்தப்பாறை (எளிது).
- தேனி மாவட்டம்: சின்ன சுருளி – தென்பழனி (மிதமானது), காரப்பாறை (எளிது), குரங்கனி சாம்பலாறு (மிதமானது).
- விருதுநகர் மாவட்டம்: செண்பகத்தோப்பு – புதுப்பட்டி (மிதமானது).
- மதுரை மாவட்டம்: தாடகை மலையேற்றப்பாதை – குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி (கடினம்).
- திண்டுக்கல் மாவட்டம்: வட்டகானல் வெள்ளகவி (கடினம்), சோலார் ஆப்சர்வேட்டரி – குண்டாறு (O-பாயிண்ட்) (மிதமானது), O-பாயிண்ட் கருங்களம் நீர்வீழ்ச்சி (எளிது).
- கிருஷ்ணகிரி மாவட்டம்: குத்திராயன் சிகரம் (கடினம்), ஐயூர் சாமி எரி (எளிது).
- சேலம் மாவட்டம்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா குண்டூர் (மிதமானது), கொண்டப்ப நாயக்கன்பட்டி குண்டூர் (கடினம்), நகலூர் – சன்னியாசிமலை (எளிது).
- திருப்பத்தூர் மாவட்டம்: ஏலகிரி சுவாமிமலை (எளிது), ஜலகம்பாறை (மிதமானது).
- திருவள்ளூர் மாவட்டம்: குடியம் குகைகள் (எளிது).
தமிழ்நாட்டில் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தமிழ்நாடு அரசு செயல்படுத்திய ஒரு முக்கிய முயற்சியாக இது அமைந்துள்ளது.
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.